குடியுரிமை திருத்த சட்டம் குறித்து உள்துறை மந்திரி அமித் ஷா உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் பேசினார். அதில் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து எதிர்க்கட்சிகள் அனைத்தும் திட்டமிட்டு தவறான செய்தியை பரப்பி வருகிறது. இந்த சட்டம் குறித்து என்னுடன் விவாதிக்க காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பகுஜன் சமாஜ் கட்சி தலைவா் மாயாவதி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பனர்ஜி உள்ளிட்டோர் தயாரா என்று சவால் விடுத்தார்.
இந்நிலையில், அமித் ஷா விடுத்த சவாலுக்கு குடியுரிமைத் திருத்தச் சட்டம் (சிஏஏ) குறித்து விவாதிக்கத் தயார் என மாயாவதி பதிலளித்துள்ளார். இது குறித்து தனது பதிவில், “குடியுரிமை சட்டதிருத்தம், என்.ஆர்.சி., என்.பி.ஆர். ஆகியவை நாட்டின் அமைப்பு முறைக்கு சிக்கல் ஏற்படுத்துபவை. இதனை நாடு முழுவதும் மக்கள் எதிர்த்து போராட்டம் நடத்துகின்றனர். குறிப்பாக இந்த போராட்டங்களில் இளைஞர்களும், பெண்களும் பங்கேற்கின்றனர். இந்த சர்ச்சைக்குரிய விஷயங்கள் குறித்து எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் விவாதிக்க பகுஜன் சமாஜ் கட்சி தயாராக உள்ளது. மத்திய அரசு விடுத்திருக்கும் சவாலை நாங்கள் ஏற்கிறோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்